Pages

Wednesday, February 6, 2013

தமிழ் சினிமாவில் இனி யாரை வில்லனாக காட்டலாம் -சில "விஸ்வரூப" ஐடியாக்கள்

விஸ்வரூபம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது போல அடுத்து தொடர்ந்து கடல், ஆதி பகவன், சிங்கம் 2 என எதிர்ப்புகள் தொடர்ந்து வலுப்பதால் நம் இயக்குனர்களுக்கு யாரை வில்லனாக காட்டுவது உட்பட பல கவலைகள் இருக்கும். அவர்களுக்கு சில யோசனைகள்.



1. படத்தில் முதலில் யார் கெட்டவன் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள், முன்பெல்லாம் வில்லன் தான் சரக்கடிப்பார், கற்பழிப்பார், ரவுடியாய் இருப்பார். ஆனால் இப்போது ஹீரோ தான் இதையெல்லாம் செய்கிறார். இப்படியான படங்களுக்கு நீங்கள் ஹீரோவுக்கோ, வில்லனுக்கோ பெயரே வைக்க கூடாது. வேண்டுமானால் அவர்களை ஹீரோ என்றும் வில்லன் என்றும் கூறிக் கொள்ளலாம். 

2. நடிகர்கள் போட்டிருக்கும் உடையை வைத்து என்ன மதம் என்று கண்டுபிடிப்பார்கள் என்றால், அவர்களை நிர்வாணமாக நடிக்க வைத்து விடலாம். இதனால் படத்தை உலகமே ஆதரிக்கும். இம்மாதிரி படத்தை சென்சார் போர்டுக்கு முன்பே சில குழுக்களிடம் போட்டு காட்டுவது நல்லது. பின்னர் அவர்களே சென்சார் போர்டை எதிர்த்துக் கொள்வார்கள்.

3. யாரைக் காட்டினாலும் எதிர்ப்பார்கள் என்றால் ஹாலிவுட் படங்களை போல வேற்று கிரக வாசிகளை வில்லன்களாக காட்டி விடலாம். அவர்கள் கிரகத்தில் படம் வெளியிட தடை விதிக்கப்பட்டாலும் நமக்கு கவலை இல்லை. 

4.ஒரு ரோபோவை உருவாக்கி அதை வில்லனாக்கி விடலாம். இன்னும் பல வருடங்கள் கழித்து ரோபோக்கள்  படத்தை எதிர்த்தாலும் யாருக்கும் பிரச்சினை இல்லை. 

5. ஏதாவது ஒரு மிருகத்தை வில்லனாக காட்டி விடலாம், அவைகள் எல்லாம் தியேட்டர்க்கு வராது என்பதால் நமக்கு பிரச்சினை இல்லை. 

6.கண்டிப்பாக பெயர் வைக்க வேண்டும் என்று முடிவு செய்பவர்கள் வில்லனுக்கும், ஹீரோவுக்கும் அமர் அக்பர் அந்தோணி, ராம் ராபர்ட் ரஹீம் என்று கலந்து பெயர் வைத்து விடலாம். இதனால் அவன் எந்த மதத்துக்காரன் என்று முடிவு செய்வதற்குள் நாம் படத்தை ரிலீஸ் செய்து விடலாம்.

7. வில்லன் சொந்த ஊராக அண்டார்டிகா, கிரீன்லாந்து போன்றவற்றை சொல்லலாம்.

8. அடல்ட்ஸ் ஒன்லி என்பது போல படத்தை ஹிந்தூஸ் ஒன்லி, முஸ்லீம்ஸ் ஒன்லி, கிறிஸ்டியன்ஸ் ஒன்லி என்று சொல்லி எடுக்கலாம்.

9. கண்டிப்பாக பிரச்சினை வரும் என்று தெரிந்தால் படத்தை பத்து மணி நேரத்துக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் 24 பேர், 34 பேர் கொண்ட அமைப்புகள் வந்து படத்தை கட்டி, வெட்டி, ஒட்டி ஒரு இரண்டு மணி நேரமாவது கொடுப்பார்கள் என்று நம்பலாம். [இதன் இன்னொரு நன்மை படத்திற்கு எடிட்டர் தேவை இல்லை]

10. படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் வைக்க வேண்டும் என்றால் பேரரசுவை பின்னணி இசையமைப்பாளராக போடலாம். இதனால் வசனம் என்ன என்றே கேட்காத அளவுக்கு அவர் மியூசிக் போட்டு விடுவார். 

11. கண்டிப்பாக பிரச்சினைக்கு உரிய படம் தான் எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதல்வரின் உறவினர்களை நடிக்க வைத்து/தயாரிக்க வைத்து படம் எடுக்கலாம். 

12. 2016 வரை அப்படியான படம் எடுக்க விரும்புவர்கள் "மூன்று நாள் தொடர்ந்து எப்படி முதுகு வளைத்தே இருப்பது" என்ற புத்தகத்தை படித்து விட்டு எடுக்கவும். 

13. படத்தில் பிரச்சினை ஒன்றும் இல்லை, ஆனால் ஹிட் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சத்தை வக்கீல்கள், சில அமைப்புகளுக்கு கொடுத்து படத்தை எதிர்க்க சொல்லலாம். படத்தில் நடித்தவர்களை விட இவர்களின் நடிப்பு சூப்பராக இருக்கும்.