Pages

Thursday, November 28, 2013

திரா - Thira

முதல் இரண்டு படங்களில் நட்பு, காதல் என்று ஜாலியான கதைகளங்களை தெரிவு செய்த வினீத் ஸ்ரீனிவாசன் இந்த முறை எடுத்திருப்பது மனித கடத்தல் பற்றிய திரில்லர் வகையறா படம். ராகேஷ் மண்டோடியின் கதை, திரைக்கதையில் இவர் இயக்கி உள்ளது தான் "திரா" (அலை)



பெண் குழந்தைகளுக்கான ஆதரவு இல்லம் நடத்தும் டாக்டராக வரும் ஷோபனா, மனித கடத்தல் பற்றிய தகவல்களை விசாரித்ததற்காக  மர்மமான முறையில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளரான தன் கணவரின் இறப்பிற்கு அமைச்சர் ஒருவரிடம் பேசுவதாக படம் ஆரம்பிக்கிறது. அதே இரவில் அவரின் ஆதரவு இல்லத்தில் இருந்து அனைத்து பெண் குழந்தைகளையும் ஒரு கும்பல் கடத்தி சென்று விட அவர்களை தேட தொடங்குகிறார். அதே நகரத்திற்கு மறுநாள் காலை வரும் தியானின் கண் முன்பே அவரின் தங்கை அதே கும்பலால் கடத்தப்படுகிறார். கடத்தல்காரர்களை தனித்தனியாக தேடி செல்லும் போது ஒரு கட்டத்தில் இருவரும் அவர்களிடம்  மாட்டிக்கொள்ள, பின்னர் அங்கிருந்து தப்பி இருவரும் இணைந்து கடத்தப்பட்ட குழந்தைகளை எப்படி தேடி மீட்கிறார்கள் என்பது தான் கதை.

படத்தின் ஆரம்பம் முதல் நம்மை ஈர்ப்பது ஷோபனாவின் நடிப்பு, பின்னணி இசை மற்றும் படத்தின் கதை. மிகவும் துணிச்சலாக ஒற்றை ஆளாக பெண் குழந்தைகளை தேடி செல்லும் போதும், பின்னர் ஒவ்வொரு முறையும் தியான் என்ன செய்ய வேண்டும் என்று அவரை இயக்கும் போதும் அற்புதமாக செய்திருக்கிறார் ஷோபனா. தியான், வினீத்தின் தம்பியான இவருக்கு படத்தில் பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை என்ற போதிலும் தன் கதாபாத்திரத்தை "பயத்துடனேயே" செய்திருக்கிறார். மற்றபடி  திருநங்கையாக வரும் தமிழ் நடிகையும் நன்றாக நடித்திருக்கிறார். இவரின் கதாபாத்திரத்தை படம் முழுக்க பயன்படுத்தி இருக்கலாம். 

எப்படி குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள், யார் எல்லாம் இதில் உள்ளனர் என்பது போன்ற தகவல்கள் கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்கின்றன. வசனம் படத்திற்கு இன்னொரு பலம். ரொம்பவே ஈர்த்த ஒன்று "எல்லோருக்கும் கண்கள் உள்ளது, ஆனால் நமக்கு பாதிப்பதை மட்டுமே நாம் கவனிக்கிறோம்". அவ்வபோது வரும் சிறுசிறு நகைச்சுவை வசனங்களும் படத்தை விரும்ப வைக்கின்றன. 

அருமையான கதையென்ற போதிலும் திரைக்கதையில் கொஞ்சம் கோட்டை விட்டு விட்டார் ராகேஷ் மன்டோடி. அவ்வளவு பெரிய கடத்தல் கும்பலை ஷோபனாவும், தியானும் பின் தொடர்ந்து செல்லும் இடங்களை சுவாரஸ்யமாக வைக்க தெரிந்தவருக்கு இவர்களிடம் கடத்தல் கும்பல் மாட்டிக் கொள்ளும் இடங்களை எல்லாம் மிக எளிதாக தெரிந்து கொள்ளும் படி வைத்திருக்கிறார். இருவரும் மிக எளிதாக குழந்தைகள் எங்கே கடத்தப்படுகிறார்கள் என்று கண்டுபிடித்து சென்று, மிகப் பெரிய நெட்வொர்க்கிடம் இருந்து ரொம்பவே எளிதாக அவர்களை காப்பாற்றி விடுகிறார்கள்.  

இன்னும் கொஞ்சம் திரைக்கதையை சுவாரஸ்யமாக்கி இருந்தால் அலை பெரிதாக இருந்திருக்கும். 

Monday, October 14, 2013

நீ - நான்



என்னை மிகவும் பிடிக்கும்
என்றாய்
எல்லோரும் என்னையே
பேசுவதாய், பார்ப்பதாய்
கூறினாய்
எல்லோரிலும் நல்லவன்
நான் என்றாய்
எப்போதும் தவறுகள்
செய்வதில்லை என்றாய்
நீ யார் என்றேன்
நீதான் என்றாய்

-பிரபு கிருஷ்ணா

Monday, March 4, 2013

Celluloid - மலையாள திரைப்பட விமர்சனம்

எப்போதும் மலையாள படங்கள் ஏதோ ஒரு வகையில் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். இந்த முறை ஒரு மலையாள படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணத்தை தொடர்ந்து என் கணினியில் பார்த்த மலையாள திரைப்படங்கள் விதைத்தன. 

என்ன படம் பார்க்கலாம் என்று நினைத்த வேளையில் பிருத்விராஜ்,  மம்தா மோகன்தாஸ் , ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து ஒரே வாரத்தில் 7 மாநில விருதுகளை வென்ற Celluloid திரைப்படத்தை தெரிவு செய்தேன். விருதுகளை விட படத்தை பார்க்க தூண்டிய முக்கிய காரணம் ஜெ.சி.டேனியல் என்ற மனிதர். அவர் தான் மலையாள சினிமாவின் தந்தை. 


1920 களில் தொடங்கும் படம், ஜெ.சி.டேனியல்(பிருத்விராஜ்) மும்பைக்கு சென்று எப்படி படம் எடுப்பது என்று கற்றுக் கொள்வதில் ஆரம்பமாகிறது. அங்கிருந்து சொந்த ஊரான  திருவிதாங்கூருக்கு திரும்பி தன் மனைவி ஜேனட்டிடம் (மம்தா மோகன்தாஸ்) தன்னுடைய திரைப்படம் குறித்த கனவுகளை விவரிக்கிறார். 

படத்திற்காக தன் சொத்துக்களை விற்று படமெடுக்க ஆரம்பிக்கும் டேனியல்க்கு பல தடங்கல்கள் வருகிறது. இதிகாச கதைகளை தவிர்த்து தனது சொந்த கதையை திரைப்படமாக்க நினைத்து விகதகுமாரன் (The Lost Child - தொலைந்த குழந்தை) என்ற பெயரில் படமெடுக்க ஆரம்பிக்கிறார், அவரே ஹீரோவாக நடிக்கிறார். எப்படி படமெடுக்கிறார், என்ன வரவேற்பு கிடைக்கிறது, இறுதியில் அவர் எப்படி மலையாள சினிமாவின் தந்தையானார் என்பது தான் மீதிக்கதை.

படத்தில் நடிக்க மும்பையில் இருந்து நடிக்க வரும் கதாநாயகி பெரிய பந்தா செய்ய அவரை நீக்கி விட்டு கிராம கூத்துகளில் நடிக்கும் ரோசம்மாவை (சாந்தினி)   அழைத்து வருகிறார். தலித் சமூகத்தவரான ரோசம்மாவின் கதையும் நெகிழ்ச்சியுடன் சொல்லப்பட்டுள்ளது. அவர் பெயரை ரோஸி என மாற்றுகிறார் டேனியல்.

படமெடுத்து முடித்த பின் அதை திரையிடும் டேனியல் ஊரில் உள்ள பெரிய மனிதர்களை அழைக்கிறார், படத்தில் நடித்த ரோஸியும் அழைக்கப்பட்டு உள்ளார். பெரிய மனிதர் என்ற போர்வையில் உள்ளவர்கள்  தியேட்டருக்குள்    ரோஸி வந்தால் நாங்கள் வரமாட்டோம் என்று சொல்கிறார்கள். வேறு வழி இல்லாமல் ரோஸியை அடுத்த காட்சி பார்க்க சொல்கிறார் டேனியல். படம் திரையிடப்படும் போது தியேட்டருக்கு வெளியே ஏக்கத்துடன் நிற்கிறார் ரோஸி. கொஞ்ச நேரத்தில் நாயர் பெண்ணாக தாழ்ந்த சாதியை சேர்ந்த ரோஸி நடித்துள்ளதை கண்டவர்கள் அதை எதிர்த்து தியேட்டரை விட்டு வெளியேறுகின்றனர். வெளியே நிற்கும் ரோஸியை கண்டவர்கள் அவரை துரத்தி அடிக்க செல்கின்றனர். அவர்களிடம் இருந்து தப்பி தன் வீட்டுக்கு வரும் ரோஸியை தேடி இவர்களும் வீட்டுக்கு வந்து அவரது தாய், தந்தையை தாக்குகின்றனர். அங்கிருந்து தப்பியோடும் இடத்தில் முடிகிறது ரோஸியின் கதை. 

கேரளாவின் முதல் கதாநாயகியான ரோஸி அவ்வாறு துரத்தப்பட்டதாலோ தானோ என்னவோ இன்று வரை கேரள நாயகிகள் அனைவரும் வேறு மாநிலங்களுக்கு நடிக்க வருகிறார்கள். 

படத்தில் நடிக்க டேனியல் வீட்டுக்கு வரும் ரோசம்மா தான் தாழ்ந்த சாதி என்ற எண்ணத்துடன் எல்லாவற்றையும் கூச்சத்துடன் எதிர்கொள்கிறார். மதியம் சாப்பிடும் போது வீட்டுக்கு வெளியே அமர்ந்து கஞ்சி குடிப்பது போன்ற காட்சிகள் காட்டப்படும் போது எந்த அளவிற்கான சமூக கொடுமை நடந்துள்ளது என்பதை நம் மனதில் பதிய வைக்கிறது இப்படம். ரோசம்மாவின் கூச்சம் போக்க பிரயத்தனப்படும் டேனியல் சினிமாவில் சாதி, மதம் எதுவும் இருக்கப் போவதில்லை, சினிமாவில் தாழ்ந்த சாதிக்காரனை உயர்ந்த சாதிக்காரன் ஆக்கலாம் என்று கூறும் காட்சிகளில் அவரின் சமூக மாற்றம் குறித்த எண்ணமும் வெளிப்படுகிறது. ஜேனட்டும் இதற்கு ஆமோதிக்கிறார்.

படத்திற்கு அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் தற்போது தமிழகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் வந்து தங்குகிறார் டேனியல். பின்னர் சென்னை வந்து பல் மருத்தவம் படித்து மருத்துவர் ஆகிறார். பின்னர் மதுரை, புதுகோட்டை பகுதிகளில் மருத்துவராக இருக்கிறார்.  அவரிடம் சிகிச்சை பெற வரும் பி.யூ.சின்னப்பா அவரின் சினிமா ஆசை அறிந்து அவரை மீண்டும் படமெடுக்க சென்னை அழைக்கிறார். அவருடன் சென்று மீண்டும் சேர்த்த சொத்தை எல்லாம் இழந்து மறுபடியும் அகஸ்தீஸ்வரத்துக்கு திரும்புகிறார் டேனியல். 

1966-இல் மலையாள சினிமாவின் முதல் படமெடுத்த டேனியல் குறித்து அறிய வரும் பத்திரிக்கையாளர் சேலங்காடு கோபாலகிருஷ்ணன் (ஸ்ரீனிவாசன்) அவரை சந்திகிறார்.  அவருக்கான அங்கீகாரம் பெற ராமகிருஷ்ணன் ஐயர் ஐ.ஏ.எஸ் அவர்களை அணுகுகிறார். பிராமணர் எடுத்த பாலன் தான் முதல் படம் எனவும், நாடாராகிய டேனியல் எடுத்த படத்திற்கு ஆதாரம் எதுவுமில்லை எனவும் அவர் சாதி வெறியில் சொல்லிவிட கோபமாக வெளியேறுகிறார் கோபாலகிருஷ்ணன் . ஏழ்மையில் வாடும் தன் குடும்பத்துக்கு அரசு ஏதேனும் உதவி செய்யுமா என மீண்டும் கோபாலகிருஷ்ணனிடம்  கேட்கிறார் ஜேனட். இதற்கான அனுமதியும் மறுக்கப்படுகிறது அதே அதிகாரியால். 1975 - இல் டேனியல் மரணிக்கும் போது அவர் சாதாரண மனிதன் தான். அதே ஆண்டில் தான் இறந்துள்ளார் இவரது பட நாயகி ரோஸியும்(படத்தில் ரோஸியின் இறப்பு காட்டப்படவில்லை). 

இப்போது கேரளா அரசு மலையாள சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ஜெ.சி.டேனியல் விருது என்று பெயரிட்டு உள்ளது. பி.கே.ரோஸி என்ற பெயரில் கேரள அரசு ஒரு சினிமா விருது வழங்கும் என்றும் அறிவித்துள்ளது.

திரைப்படம் குறித்த தன் கனவுகளை விவரிக்கும் காட்சியில் கண்களிலேயே தன் ஆசைகள் மொத்தத்தையும் காண்பிக்கும் டேனியல், இறக்கும் தருவாயில் தன் படம் குறித்த அதே கனவுகளோடு  இறக்கிறார். இரண்டுமே மிக அருமையான காட்சிகள். படத்தில் டேனியலாகவே வாழ்ந்துள்ளார் பிருத்வி ராஜ். 

ஒரு சினிமாக்காரரின் வரலாற்றில் சாதிக்கொடுமை போன்ற விசயங்களை சமரசமின்றி சொல்லி உள்ளார் இயக்குனர் கமல். காட்சி அமைப்புகள், நடிப்பு, கலை, கேமரா என அனைத்திலும் முந்தைய நூற்றாண்டை கண்ணில் நிறுத்தி உள்ளது இவரின் டீம். மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனரான இவர், நமக்கு "பிரியாத வரம் வேண்டும்" திரைப்படம் தமிழில் ஏற்கனவே அறிமுகம் ஆனவர்தான்.

படத்தில் மிக முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டியது இசை. இசையமைப்பாளர் ஜெயச்சந்திரனின் பின்னணி இசை, பாடல் இரண்டுமே படத்தின் கதை போலவே நம்மை ஈர்க்கின்றன.

படத்தின் பாடல்கள்:

செல்லுலாய்ட் மலையாளிகள் மட்டும் பார்க்க வேண்டிய படமல்ல. சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக காண வேண்டிய படம். 

Wednesday, February 6, 2013

தமிழ் சினிமாவில் இனி யாரை வில்லனாக காட்டலாம் -சில "விஸ்வரூப" ஐடியாக்கள்

விஸ்வரூபம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது போல அடுத்து தொடர்ந்து கடல், ஆதி பகவன், சிங்கம் 2 என எதிர்ப்புகள் தொடர்ந்து வலுப்பதால் நம் இயக்குனர்களுக்கு யாரை வில்லனாக காட்டுவது உட்பட பல கவலைகள் இருக்கும். அவர்களுக்கு சில யோசனைகள்.



1. படத்தில் முதலில் யார் கெட்டவன் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள், முன்பெல்லாம் வில்லன் தான் சரக்கடிப்பார், கற்பழிப்பார், ரவுடியாய் இருப்பார். ஆனால் இப்போது ஹீரோ தான் இதையெல்லாம் செய்கிறார். இப்படியான படங்களுக்கு நீங்கள் ஹீரோவுக்கோ, வில்லனுக்கோ பெயரே வைக்க கூடாது. வேண்டுமானால் அவர்களை ஹீரோ என்றும் வில்லன் என்றும் கூறிக் கொள்ளலாம். 

2. நடிகர்கள் போட்டிருக்கும் உடையை வைத்து என்ன மதம் என்று கண்டுபிடிப்பார்கள் என்றால், அவர்களை நிர்வாணமாக நடிக்க வைத்து விடலாம். இதனால் படத்தை உலகமே ஆதரிக்கும். இம்மாதிரி படத்தை சென்சார் போர்டுக்கு முன்பே சில குழுக்களிடம் போட்டு காட்டுவது நல்லது. பின்னர் அவர்களே சென்சார் போர்டை எதிர்த்துக் கொள்வார்கள்.

3. யாரைக் காட்டினாலும் எதிர்ப்பார்கள் என்றால் ஹாலிவுட் படங்களை போல வேற்று கிரக வாசிகளை வில்லன்களாக காட்டி விடலாம். அவர்கள் கிரகத்தில் படம் வெளியிட தடை விதிக்கப்பட்டாலும் நமக்கு கவலை இல்லை. 

4.ஒரு ரோபோவை உருவாக்கி அதை வில்லனாக்கி விடலாம். இன்னும் பல வருடங்கள் கழித்து ரோபோக்கள்  படத்தை எதிர்த்தாலும் யாருக்கும் பிரச்சினை இல்லை. 

5. ஏதாவது ஒரு மிருகத்தை வில்லனாக காட்டி விடலாம், அவைகள் எல்லாம் தியேட்டர்க்கு வராது என்பதால் நமக்கு பிரச்சினை இல்லை. 

6.கண்டிப்பாக பெயர் வைக்க வேண்டும் என்று முடிவு செய்பவர்கள் வில்லனுக்கும், ஹீரோவுக்கும் அமர் அக்பர் அந்தோணி, ராம் ராபர்ட் ரஹீம் என்று கலந்து பெயர் வைத்து விடலாம். இதனால் அவன் எந்த மதத்துக்காரன் என்று முடிவு செய்வதற்குள் நாம் படத்தை ரிலீஸ் செய்து விடலாம்.

7. வில்லன் சொந்த ஊராக அண்டார்டிகா, கிரீன்லாந்து போன்றவற்றை சொல்லலாம்.

8. அடல்ட்ஸ் ஒன்லி என்பது போல படத்தை ஹிந்தூஸ் ஒன்லி, முஸ்லீம்ஸ் ஒன்லி, கிறிஸ்டியன்ஸ் ஒன்லி என்று சொல்லி எடுக்கலாம்.

9. கண்டிப்பாக பிரச்சினை வரும் என்று தெரிந்தால் படத்தை பத்து மணி நேரத்துக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் 24 பேர், 34 பேர் கொண்ட அமைப்புகள் வந்து படத்தை கட்டி, வெட்டி, ஒட்டி ஒரு இரண்டு மணி நேரமாவது கொடுப்பார்கள் என்று நம்பலாம். [இதன் இன்னொரு நன்மை படத்திற்கு எடிட்டர் தேவை இல்லை]

10. படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் வைக்க வேண்டும் என்றால் பேரரசுவை பின்னணி இசையமைப்பாளராக போடலாம். இதனால் வசனம் என்ன என்றே கேட்காத அளவுக்கு அவர் மியூசிக் போட்டு விடுவார். 

11. கண்டிப்பாக பிரச்சினைக்கு உரிய படம் தான் எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதல்வரின் உறவினர்களை நடிக்க வைத்து/தயாரிக்க வைத்து படம் எடுக்கலாம். 

12. 2016 வரை அப்படியான படம் எடுக்க விரும்புவர்கள் "மூன்று நாள் தொடர்ந்து எப்படி முதுகு வளைத்தே இருப்பது" என்ற புத்தகத்தை படித்து விட்டு எடுக்கவும். 

13. படத்தில் பிரச்சினை ஒன்றும் இல்லை, ஆனால் ஹிட் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சத்தை வக்கீல்கள், சில அமைப்புகளுக்கு கொடுத்து படத்தை எதிர்க்க சொல்லலாம். படத்தில் நடித்தவர்களை விட இவர்களின் நடிப்பு சூப்பராக இருக்கும். 

Saturday, January 26, 2013

விஸ்வரூபம் - முஸ்லீம்களுக்கு ஹீரோவா? வில்லனா?


விஸ்வரூபம் படம் பார்ப்பதே விஸ்வரூபமாகிவிட்ட நிலையில் இங்கே ரிலீஸ் ஆன முதல் இரண்டாம் காட்சி தான் பார்க்க முடிந்தது. போடுவார்களா மாட்டார்களா என்ற சந்தேகத்துடன் தான் தியேட்டரில் நுழைந்தேன். படத்தின் இடையில் போலீஸ் வந்த போது எங்கே படம் பாதியில் நிறுத்தப்பட்டு விடுமோ என்று கூட எண்ணினேன், ஆனால் எப்படியோ படத்தை முழுமையாக பார்க்க முடிந்தது. 

பேஸ்புக்கில் இதை ''அமெரிக்க கிறிஸ்துவர்களை கொல்ல முயற்சிக்கும் ஆப்கன் முஸ்லீம் சதியை இந்தியாவின் முஸ்லீம் முறியடிக்கும் கதை." என்று சொல்லி இருந்தேன். இதில்  ஆப்கன் முஸ்லீம் என்பது அல்-கொய்தா தீவிரவாதிகள்.படம் பாதிக்கும் மேல் இவர்கள் தாய்நாடான ஆப்கனில் தான் நடக்கிறது. 

ஆப்கனுக்கே சென்று வந்த ஒரு உணர்வை நமக்கு தருவது போல் இருக்கிறது படத்தின் காட்சியமைப்புகள். சில நொடிகள் வரும் சிறுவர்கள் முதல், படம் நெடுக வரும் கமல், ராகுல் போஸ், ஜெய்தீப் என ஒவ்வொருவரின் நடிப்பும் அருமை.  அங்கிருந்து மீண்டும் அமெரிக்காவுக்கு தாவும் போது கதை முழுக்க கமல் முதுகில். இதை இயக்குனர் கமல் உதவியுடன் நடிகர் கமல் மிக அற்புதமாக முடித்துக் கொடுத்திருக்கிறார். 

கிளைமாக்ஸ் கொஞ்சம் மெதுவாக இருப்பதாக தோன்றினாலும் எந்த வித பதட்டமும் இல்லாமல் நாம் பார்க்கும் உணர்வை தான் படத்தில் இருப்பவர்களும் செய்கிறார்கள், ஆம் தீவிரவாதிகள் ஒன்றும் உள்ளூர் தாதாக்கள் இல்லை அல்லவா கத்தி கூப்பாடு போட. 

படத்தின் ஒவ்வொரு விசயமும் மிக கவனமாக கையாளப்பட்டுள்ளன. இசையை பற்றி சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே இருக்கலாம். படத்தின் ஆரம்பத்தில் வரும் "உன்னை காணாது நான்" என்ற ஒரு பாடல் மற்றும் ஆப்கனில் நடக்கும் காட்சிகளில் வரும் பின்னணி இசை ஆகியவை சாம்பிள். 

கேமரா, இவ்வளவு புதியதாக காட்சியமைப்புகள் இதுவரை பார்த்தே இருக்க முடியாது நாம். மிக அற்புதமாக கையாண்டுள்ளார் சனு வர்கீஸ். அடுத்து கலை இயக்குனர் லால்குடி இளையராஜா, ஆப்கன் தீவிரவாதிகள் இடங்களாக காட்டப்படுபவற்றை மிக அற்புதமாக அமைத்துள்ளார். 

எடிட்டிங், ஒரே ஒரு காட்சி போதும் மகேஷ் நாராயணன் திறமைக்கு, கமல் தன்னையும் மனைவியையும் பிடித்து வைத்திருப்பவர்களை அடித்து வீழ்த்தும் இடம். மிக அற்புதாக வெட்டி, ஒட்டி இருக்கிறார் படம் முழுக்க.

இனி தடை பற்றி பார்ப்போம். படத்திற்கு தடை வேண்டும் என்பவர்கள் சொல்லும் கருத்துகள் கொல்பவன் குரானை படித்து விட்டு கொல்கிறான், பிரார்த்தனை செய்து விட்டு கொல்கிறான், தீவிரவாதிகளுக்கு தமிழகம் புகலிடம் என்று உள்ளது. 

இங்கே நாம் கவனிக்க வேண்டியது படம் முழுக்க முழுக்க தாலிபான், அல்-கொய்தா தீவிரவாதத்தை பற்றியது. இவர்கள் என்ன முஸ்லீம்களில் நாத்திகர்களா? இல்லை தாங்கள் கொலை செய்யும் போது கடவுள் இல்லை என்று சொல்லி கொல்கிறார்களா? எந்த அளவுக்கு கொலை செய்கிறார்களோ அந்த அளவுக்கு பிரார்த்தனையும் செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா யாராவது? ஏன் முஸ்லீம் மட்டும் தான் அப்படி செய்வதை காட்ட வேண்டும் என்று கேட்பவர்கள் கொஞ்சம் கமலின் முந்தைய படமான அன்பே சிவத்தை பார்க்கவும். 

படத்தின் மிக முக்கிய கதாப்பாத்திரமான உமர், தான் தமிழ் பேச காரணம் கொஞ்ச நாட்கள் தமிழகம், அந்தமான் பகுதிகளில் பதுங்கி இருந்ததாக சொல்வது. இங்கே கமல் கவனமாக பயிற்சி என்பதை தவிர்த்திருக்கிறார், காரணம் தமிழக இஸ்லாமியர்கள் பற்றி அவர் அறிந்திருப்பதால்.

படத்திற்கு தடை என்பதை அரசியல் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்க்க முடிகிறது. ஒருவேளை கமல் இதில் அமெரிக்கர்களை காப்பாற்றுவதை இவர்கள் விரும்பவில்லையோ என்னவோ. அப்படி என்றாலும் படத்தை ஆப்கனில் கூட தடை செய்ய முடியாது, அந்த அளவுக்கு உண்மைகளை மட்டுமே சொல்கிறது விஸ்வரூபம்.

எப்படி முஸ்லீம்கள் மட்டுமோ மற்றும் எல்லா முஸ்லீம்களுமோ தீவிரவாதிகள் இல்லையோ அதே போல அமெரிக்கர்கள் அனைவரும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதையும் நாம் மறுக்க முடியாது. அங்கேயும் அரசியல் செய்யவே தீவிரவாதம் என்ற பெயர் பயன்படுத்தபடுகிறது.

கமல் ஏன் முஸ்லீம் தீவிரவாதம் பற்றிய படத்தை எடுத்தார்? இஸ்ரேல், அமெரிக்கா, இலங்கை அரசுகள் செய்யும் கொலைகளை படமாக எடுக்க வேண்டியது தானே என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன், வாருங்கள் வந்து நீங்கள் எடுங்கள், உண்மையை உலகுக்கு சொல்லுங்கள். 

ஒரு கலைஞனை நீ ஏன் இதை எடுத்தாய், அதை எடுக்கவில்லை என்று கேட்கும் உரிமை எவருக்கும் இல்லை. ஏன் என்றால் கலைஞன் என்பவன் "யாருக்கும் அடிமை இல்லை, யாருக்கும் அரசன் இல்லை". இந்த படத்தை உங்களை பார்க்க சொல்லி திணிக்கவில்லை கமல். அல்-கொய்தா பற்றிய தன் பார்வையை ஒரு படமாக எடுத்துள்ளார். 

28 முஸ்லீம் அமைப்புகள் படத்தை எதிர்க்கின்றன என்று சொல்லும் எண்ணிக்கையே காட்டுகிறது உங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை. எங்கே இந்த படத்தை ஆதரித்து பேசினால் தன்னை மதத்திற்கு எதிரானவன் என்று சொல்லி விடுவார்களோ என்ற பயத்தில் தான் நிறைய பேர் எதிர்க்கிறார்கள். ரிசானா விஷயத்திலேயே இது தெரிந்தது. மதத்தை தாண்டி கொஞ்சம் வெளியே வந்து யோசியுங்கள் உங்களுக்குள் இருக்கும் மனிதம் புலப்படும். 

இந்துக்களில் செய்யும் சாதி அரசியலை தான் உங்கள் தலைவர்களும் செய்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் பல பிரச்சினைகள் முடிந்து விடும். அப்போது விஸ்வரூபம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல உங்களுக்கு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த பதிவின் பின்னூட்டத்தில் டேம் 999, இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம் போன்றவற்றிற்கு நான் கூறிய கருத்துக்களை ஏடாகூடமாக யாராவது பயன்படுத்த விரும்பினால் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள், அந்த படங்கள் மீதான தடையும் தவறு என்பதே என் கருத்து :-) 

Monday, January 21, 2013

கிளைகளின் கதை

நெடுஞ்சாலையில் ஐம்பது வருடங்களாக
நின்றிருந்து இன்று
வெட்டப்பட்ட அந்த புளியமரத்தின்
கிளைகள் ஒவ்வொன்றும்
தன் நினைவுகளை
பகிர ஆரம்பித்தன 
தன்னை கடித்த ஆடு 
கல்லெறிந்த கார்த்திக் சிறுவன் 
காதல் பேசிய சரவணன் துர்கா 
அழுது தீர்த்த செல்லம்மா 
திருடியதை புதைத்த கதிரவன் 
பிள்ளை பெற்ற லட்சுமி 
என எல்லா கிளைகளும் 
தங்கள் நினைவுகளை சொன்ன பிறகு 
மிச்சமிருந்த 
கடைசி கிளை 
எதுவும் சொல்லவில்லை 
அநேகமாய் அது 
வெட்டியவனின் பெயரை அறிந்திருக்கும்

20/01/2013 திண்ணை இதழில் வெளியானது

Thursday, January 3, 2013

மனக்குதிரை






எங்கும் தேட வேண்டாம் என்னை
உங்களுக்குள் தான் இருக்கிறேன்
உண்மையாகவும், பொய்யாகவும்
நிஜமாகவும், நிழலாகவும்
அன்பாகவும், வெறுப்பாகவும்
இன்பமாகவும், துன்பமாகவும்
நம்பிக்கையாகவும், துரோகமாகவும்
என்னை நான் என்றே
நீங்கள் அறிவீர்கள்