Pages

Monday, January 30, 2012

வெங்காயம், உச்சிதனை முகர்ந்தால் - பிழைக்கத் தெரியாதவர்களின் சினிமா

கடந்த வாரத்தில் பார்த்த திரைப்படங்களில் வெங்காயம் மற்றும் உச்சிதனை முகர்ந்தால் ஆகியவற்றை பற்றிய பகிர்வு இது. 

ஒரு சினிமா என்றால் என்ன இருக்க வேண்டும்? என்று சிந்திக்க வைத்தன இரண்டும். இந்த இரண்டிலும் கதை மட்டும் தான் ஹீரோ, ஹீரோயின் எல்லாமே. 

முதலில் "வெங்காயம்" 




சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் "ஜோசியம்" என்ற ஒரு மிகப் பெரிய மூடநம்பிக்கையை எதிர்த்து எடுக்கப்பட்ட படம். நான்கு ஜோசியர்களால் பாதிக்கப்பட்ட நான்கு சிறுவர்கள் செய்யும் கடத்தல் தான் படத்தின் கதை. நடிப்பு,கேமரா என்பதை தவிர்த்து விட்டு பார்த்தால் உலக சினிமா அடையாளங்கள் தெரியும் ஒரு அருமையான படம். படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, 

கடத்தப்பட்ட ஜோசியர் ஒருவரால் தான் பேரனை இழந்த பாட்டி ஒருவர் பைத்தியமாக அழுது கொண்டு இருப்பார் அப்போது ஹீரோ அவருக்கு பணம் கொடுத்து அழாதே என்று சொல்வார், கிளைமாக்ஸில் அதே ஹீரோ அழும்போது பணத்தை கொடுத்து அழாதே என்று சொல்வார் அந்தப் பாட்டி. 

அடுத்து "உச்சிதனை முகர்ந்தால்"




ஈழத்தைப் பற்றிய அருமையான பகிர்வு. ஒரு பதின்மூன்று வயது பெண் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கருத்தரிக்க, அதை கலைக்க தமிழகம் வருகிறாள் புனிதவதி அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. புனிதவதி என்ற பெயரில் நடித்து இருக்கும், இல்லை வாழ்ந்து இருக்கும் நீநிகாவின் திறமை அபாரம். 

இதில் ஒரு காட்சி என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு நிறைய காட்சிகள் அருமை.  குறிப்பாக ஒரு காட்சியில் சிங்களக் கருவை சுமக்கும் தன் மகளை கொன்று விட நினைக்கும் தாய், தன் மகள் மாடியில் இருந்து எட்டிப் பார்க்கும் போது தவறி விழுந்து விடுவாளோ என்று பதறுவது தாய்மையின் பாசம் சொல்லுகிறது. 

திரு நங்கைகளை மிக அழகாக காட்டிய ஒரே படம் இது தான் என்று நினைக்கிறேன். (நர்த்தகி இன்னும் பார்க்கவில்லை). ஏழாம் அறிவை தமிழர்களின் பெருமை என்று உளறியவர்கள் இதை ஒரு தரம் பார்க்கலாம்.

கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய "இருப்பாய் தமிழா நெருப்பாய்" என்ற பாடலில் தெறிக்கிறது தீ.




சரி விசயத்துக்கு வருவோம். இந்த இரண்டு படங்களையும் எந்த கணக்கில் சேர்ப்பது. இன்றைய நிலையில் சினிமா என்பதன் அர்த்தமே மாறிவிட்டது. மூன்று மணி நேரம் என்னை கட்டிப் போட வேண்டும். எதையாவது காட்ட வேண்டும் என்று பிரயத்தனப்படும் இயக்குனர்கள். இது தான் இன்றைய சினிமா. 

குப்பைப் படங்கள் எல்லாம் எடுக்கப்படுவது கூட தவறில்லை. ஆனால் அதை நம் மீது திணிக்க முயலும் மீடியா மீது தான் மிகப் பெரிய வெறுப்பு. வெங்காயம் படத்துக்கு எந்த தொலைக்காட்சியும் ஒரு நிகழ்ச்சி கூட ஒளிபரப்பவில்லை.  

பணம், பணம் பணம் என்று பார்த்து இன்று நாம் சினிமா என்பதை வியாபாரம் என்று ஒரு பார்வையில் மட்டுமே பார்க்கிறோம். சினிமா என்பது நம் கலாச்சாரத்தின் ஒரு அடையாளம். ஐம்பது வருடங்கள் கழித்து ஒஸ்தி, வெடி, மயக்கம் என்ன என்று யாரும் பார்க்கப் போவது இல்லை. (பார்த்தால் காறித் துப்புவார்கள் என்பது வேறு விஷயம்)

இன்னொரு விஷயம் கேவலமான வார்த்தைகள் வரும் தமிழ் படங்கள் நிறைய பார்த்து இருப்போம். அந்த வார்த்தைகள் எல்லாம் சென்சார் போர்டுக்கு தெரியவில்லை. ஆனால் உச்சிதனை முகர்ந்தால் படத்தில் "இலங்கை" என்று வரும் வார்த்தைகள் சென்சார் செய்யப்பட்டு உள்ளன. இவர்களுக்கு சோனம் கபூர் நடு விரலைக் காட்டியதில் தவறே இல்லை. 

ஹாலிவுட், பாலிவுட் என்று இருப்பதை எல்லாம் பார்த்து காப்பி அடிப்பவர்களுக்கு உலக சினிமாவில் எடுக்கப்படும் நல்ல சினிமாக்கள் இருப்பது தெரியவே இல்லை போலும். (தெய்வத் திருமகள், நந்தலாலா எடுத்தவர்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை)

கலைக்காக படம் எடுப்பவர்களை இன்று பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்ல வேண்டும். அந்த வகையில் வருகிறார்கள் வெங்காயம், உச்சிதனை முகர்ந்தால் இயக்குனர்கள். ஆனால் காலம் தாண்டியும் நிற்கப் போவது இந்தப் பிழைக்கத் தெரியாதவர்கள் தான்.

பின் குறிப்பு: இரண்டு படங்களையும் DVD-யில் தான் பார்க்க முடிந்தது. இங்கே எந்த தியேட்டரிலும் ரிலீஸ் ஆகவில்லை என்பது ஒரு வருத்தமான உண்மை. அப்படி பார்த்ததுக்கு இயக்குனர்கள் மன்னிப்பார்களாக. 

10 comments:

  1. வெங்காயம் பார்த்தேன். இணையத்தில் தான், மிகப் பிடித்தது.
    தங்கள் பார்வை மிகச் சரி ஆனால் பணம் பார்க்கும் கூட்டம் இதைக் கணக்கில் எடுக்காது.

    ReplyDelete
  2. என்று களையும் கவர்ச்சி மற்றும் வியாபார சினிமா மோகம் ..
    கலையின் அங்கம் சினிமா .. அதை களங்கப்படுத்தி பார்த்து மகிழும் சிலருக்கு புரிவதில்லை நாளைய வரலாற்றில்
    உனது முத்திரை மிகவும் தரம் தாழ்ந்து போகுமென்று ..

    உங்களின் உணர்ச்சி பதிவுக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  3. ஆனால் காலம் தாண்டியும் நிற்கப் போவது இந்தப் பிழைக்கத் தெரியாதவர்கள் தான்.//
    இந்த ஒரு வரிக்காகவே காலம் முழுக்க பிழைக்க கற்றுக்கொள்ளாமலே இருக்கலாம்..மிக்க நன்றி தோழர்
    -சங்ககிரி ராச்குமார்

    ReplyDelete
  4. ஆனால் காலம் தாண்டியும் நிற்கப் போவது இந்தப் பிழைக்கத் தெரியாதவர்கள் தான்/// இந்த ஒரு வரிக்காகவே காலம் முழுக்க பிழைக்க தெரியாதவனாக இருக்கலாம்..நன்றி தோழர்,-sankagiri rajkumar

    ReplyDelete
  5. @ sankagiri rajkumar

    அருமையான படம் தந்தமைக்கு உங்களுக்கு தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். இது போன்ற திரைப்படங்களை திரையுலகம் வரவேற்காதுதான், ஆனால் உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள்.

    ReplyDelete
  6. அன்பின் பிரபு - வெங்காயத்தில் - அழும் ஹீரோவினிற்கு காசு கொடுத்து அழாதெ என ஆறுதல் கூறும் அதே பாட்டி - சூப்பர் டைரக்டோரியல் டச்

    உச்சிதனை முகர்ந்தால் - பட விமர்சனம் அருமை - நன்று - நல்வாழ்த்துகள் பிரபு - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. அன்பின் பிரபு - வெங்காயம் - அழும் கதா நாய்கனுக்கு காசு கொடுத்து அழாதே என்று ஆறுதல் கூறூம் அதே பாட்டி - சூப்பர் டைரக்டோரியல் டச்

    உச்சிதனை முகர்ந்தால் - அருமையான பட விமர்சனம். இருப்பாய் தமிழா நெருப்பாய் - நெருப்பு எரிகிறது.

    நல்வாழ்த்துகள் பிரபு - நட்புடன் சீனா

    ReplyDelete