Pages

Monday, December 28, 2009

ஏன் அழுகிறேன்?

விழிகளில் வழியும்
நீரை துடைத்துதான்
பார்க்கிறேன்,
நீரோடை போன்று வரும்
கண்ணீரை
நிறுத்த முடியவில்லை.
ஏன் அழுகிறேன் நான்?
ஏழைத் தாயை நினைத்தா?
ஏதும் செய்ய இயலாத தந்தையை நினைத்தா
தனக்கென வேலை ஏதும் இல்லாத
தனயனை நினைத்தா?
அன்பு இல்லாத
உறவுகளை நினைத்தா?
அரவணைக்காத உலகை நினைத்தா?
இல்லை,
முப்பத்து மூன்று வயதாகியும்
திருமணம் ஆகாத
என்னை நினைத்தா?
யாரை நினைத்து
நான் அழுகிறேன் ?

வறுமை

இந்தியாவின் வறுமை
ஆராய்கின்றனர் அமைச்சர்கள்
ஏ.சி அறையில்!

வாழ்க்கைச்சூடி

அன்பு கொண்டு
ஆறறிவு பெற்று
இறுமாப்பு கொள்ளாமல்
ஈதல் செய்து
உலகம் போற்ற
ஊர் பாராட்ட
எண்ணிச் செயல்பட்டால்
ஏற்றம் உண்டென்பதை
ஐயந்திரிபுற உணர்ந்து
ஒருபோதும் தோல்வியின்றி
ஓதலை விட்டுவிடாமல்
ஒளவை நெறிப்படி வாழ்ந்து
எஃகு போல் மனம் கொள்ளல் வேண்டும்

ஒரு ஐம்பது வயதுக்காரர்

அப்போது,
டேய் புது ரேடியோ
நீ தொடாதே,
என்றார் என் அப்பா!
இப்போது,
அப்பா புது கம்ப்யூட்டர்
நீங்கள் தொடாதீர்கள்,
என்கிறான் என் மகன்!

குழந்தை தொழிலாளர்கள்

புத்தக மூட்டை சுமக்கும் வயதில்
செங்கல் தட்டை
சுமக்கும் மலரே
ஏன் இந்த அவலம் ?
வாழ்க்கையின்
சந்தோஷங்களை எண்ணும் வேளையில்
தீக்குச்சிகளை எண்ணிடும் நிலையேன்?
இந்தியாவின் எதிர்கால சிற்பிகள்,
இப்போதே கற்களை உடைக்கும்
கண்ணீர் வாழ்க்கையேன்?
நவம்பர் 14
குழந்தைகள் தினமாம்
தினத்தை கொண்டடி விட்டோம்,
சரி குழந்தைகளை........?

தீட்டியதால் .......

இளங்கோவடிகள் தீட்டியதால்,
சிலப்பதிகாரம் சீரானது!
கம்பர் தீட்டியதால்,
ராமாயணம் ரம்யமானது!
திருவள்ளுவர் தீட்டியதால்,
திருக்குறள் திருமறையானது!
உமறுப்புலவர் தீட்டியதால்,
சீறாப்புராணம் சீர்மையானது!
ஆசிரியரே நீங்கள் தீட்டியதால்,
நானும் நல்லதொரு மாணவன் ஆனேன்.....

மாத பட்ஜெட்

நாய்க்கு நாலாயிரம் !
அழகுக்கு ஆறாயிரம் !
சினிமாவுக்கு சில ஆயிரம் !
புகைப்பதற்கு ஓராயிரம் !
சேமிப்பு பல ஆயிரம் !
வெட்டிச்செலவு மூன்றாயிரம் !
வேண்டிய செலவு ஒன்பதாயிரம் !
பெற்று வளர்த்து,
பேணி பாதுகாத்த
தாய்க்கு போனால் போகட்டும்
அறுநூறு ரூபாய் !

பள்ளிக்கூடம்

ஊருக்கு புதுசு நான்
பள்ளி ஆசிரியர்,
ஊரின் பள்ளி
எங்கே உள்ளது?
கேட்டேன் கடைக்காரரிடம்
கூறினார் அவர்,
அதோ அந்த
டாஸ்மார்க்கின் பின்னாடி
தோன்றியது மனதில்
" எதிர்கால சிற்பிகள்
நிகழ்கால குட்டிசுவற்றின்
பின்னால் " ,
மாறிவிட்டது பழமொழி
டாஸ்மார்க் இல்லா ஊரில்
இருக்காதே.......

படிப்பு

பளுதூக்கும் போட்டியில்
முதலிடம் பெற்றிடும்
பள்ளிக்குழந்தை